Friday 20 April 2012

பிரிவென்பது நிரந்தரமல்ல. ..

உன் நீள் நெற்றியில்
நான் இட்ட குங்குமம்
அழகாய் தானிருந்தது!

அந்த நொடி - முன்
முதலே உனை
என் மனைவியாய் - மனதில்
மரியாதை செய்து வைத்தேன்.

மனைவி என்றே நினைத்திருந்தேன்!
மனைவி என்றே அழைத்திருந்தேன்!
மனைவி என்று அணைத்தும் இருந்தேன்!

ஆயிரமுறை இதை நீ மறுத்தாலும்
அத்தனை முறையும் உனக்கெதிராய்
சாட்சி சொல்ல உன் மனம்
தயாராய் தானிருக்கும்.

சூழ்சியாலும்
சூல்நிலையாலும் - என் மேல்
நீ கொண்ட காதலை மறுக்கலாம்,
மறக்கவும் நினைக்கலாம்.
ஆனால்
நாம் வளர்த்த காதலை
மாற்றிவிட முடியாது.

என் மனம் உனக்கு தெரியாதா?
நம் காதலும் உனக்கு புரியாதா?
என் விரல்
உன் உடல் தொட
எத்தனை முறை
ஏங்கியிருந்தாய்?

அத்தனை முறையும்
நம் காதலை
நீ உணரவில்லையா?

உனக்கு புரிந்திருக்கும்,
உனக்கு மட்டுமே புரிந்துதானிருக்கும்.
இருந்தும் மறைக்கிறாய்.

உன்னை முழுதாய்
புரிந்தவன் நான் - இன்று நீ
பிரிந்துவிட்டால்
உன்னை மறந்துவிடுவேன்
என்று எப்படி எண்ணியிருந்தாய்?
காலம் கடத்தினால்
நம் காதலும் மாறலாம்
என்று கற்பனை செய்யாதே!

காலம் மாறலாம் - நம்
காதலும் மாறலாம் - ஆனால்
நாம் காதலர்களாய் வாழ்ந்த
காலம் என்றும் மாறாது.

காலம் நம் காதலை
மட்டுமல்ல
உன்னையும்
பத்திரமாய்
என்னுள் வைத்திருக்கும்.

இன்னொருத்தியை
என் வாழ்வில் ஏற்க முடியாது
என்று நான் கூறவில்லை!

ஆனால்
என் மனைவியாய்,
என் அன்பின்
முழு முதற் உருவமாய்,
உனக்களித்த நிலைய
என்னால் எப்படி மறக்க
முடியும்.

யார் கூற்றிலும்
என் காதல் மாறியிருந்தால்
அது காதலாகி விட
முடியாது.

என் காதல்
உன்னால் ஏற்பட்டது.
உன்னால் மட்டுமே - அதை
அழிக்கவும் மீண்டும்
உயிர்பிக்கவும் முடியும்.

காதலர்களாய்
பிறக்கவில்லை நாம்,
காதலிக்கவும் பிறக்கவில்லை,
இருந்தும் காதலித்தோம்!

இந்த
பிரிவென்பது
நிரந்தரமல்ல.


மீண்டும்
இவ்வுலகில் பிறப்போம்.
காதலர்களாய்
மட்டுமல்ல,
காதலிக்கவும்
மட்டுமே!

No comments: