Saturday 14 January 2012

பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…


வெளிச்சத்தோடு சமைக்க ஆகாயம்..
மண்பானையில் நிலம்..
அரிசியோடு நீர்..
வேக நெருப்பு..
வெந்து நுரையாய் பொங்கும் காற்று..
இப்படி பஞ்ச பூதங்களும் அடக்கம்
நம் படிப்பறியா பட்டிக்காட்டு உழவன்
பரம்பரையாய் கொண்டாடும் பொங்கலில்..
இன்னும் இருக்கிறது…
பழையன கழிய புதியன நுழைய போகி..
நடப்பவை எல்லாம் மங்களமாக மஞ்சள்..
இனி வரும் காலம் இனிப்பாக கரும்பு..
அக்றிணைகள்மேல் அன்புணர்த்த
மாடுகளுக்கும் மரியாதை..
வீரத்தின் இன்றியமையாமை 
தெளிவாய் கற்க ஜல்லிக்கட்டு..
அடடா..
ஒரு பண்டிகைக்குள் எத்தனை அழகான
வாழ்வியல் நெறிகள்..
நம் தமிழ் மூதாதையர்கள்
நல்லறிவும் நன்றியுணர்வும் மிக்கவர்கள்..
நம்மைப்போல் நாகரீகமெனும் போர்வைக்குள்
நிர்வாணமாய் நிற்பவர்கள் அல்ல..
ஆழமான அர்த்தம் கொண்ட
நம் தமிழர் திருநாளின்
தனித்துவ மகத்துவம் புரியாமல்
நாமோ பேருக்கு பொங்கல் வைத்துவிட்டு
ஹாப்பி பொங்கல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
அப்படியே மூழ்கிவிடுகிறோம்
தொலைகாட்சி பெட்டியில்
நடிகைகளின் நேர்க்காணல் பார்க்க..
எம்மக்களே..
வாழ்வியல் பொருள் விளக்கும் பொங்கல் பண்டிகையின்
உண்மை அர்த்தம் உணர்ந்து
நம் தரணிக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும்
பெருமை சேர்க்கும் வழியைக் கருதி இனி
எடுத்துக்கொள்வோம் புது உறுதிமொழி..
பண்பாட்டுக் களஞ்சிய பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.

No comments: