Tuesday 6 September 2011

நம்பிக்கையோடு.....


இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை.. உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை ! 

எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது.. ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் ! 

இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்.. இருந்தால் சந்தோஷம் ! 

என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ! 

இனி கவிதைக்குள்…. 

இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே.. 
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே.. 
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்.. 
கார சாரமாய்.. 

இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல.. 
உங்களில் சிலரைப் பற்றி ! 

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை 
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத் 
தோன்றுகிறது எனக்கு ! 

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன 
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது ! 

இயற்கையின் படைப்பில் 
அழகானவர்கள் நீங்கள் என்பதை 
என்றும் மறுப்பதற்கில்லை.. 

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில் 
விழுந்து விடுவதும் உண்மை ! 

அப்படி இருக்க 
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும் 
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய 
வலம் வருவதன் மூலமும் 
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ? 

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி 
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்.. 
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் ! 

ஆனால் உடைக் குறைப்பு செய்வது 
தனிப்பட்ட விஷயம் இல்லையே ! 

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க 
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும் 
மாறியதை வரவேற்கலாம் ! 
அத்தோடு நில்லாமல்.. 

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்.. 
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்.. 
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள் 
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்.. 
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்.. 
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில் 
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்.. 

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய் 
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம் 
என்ன சொல்ல வருகிறீர்கள் ? 

உடல் பிதுங்கி 
அங்கங்கள் அங்கங்கே அப்படியே 
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க 
நீங்கள் அணியும் உடைகள் 
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ? 

உங்களின் ஜன்னல்களை 
நீங்களே திறந்து வைத்து விட்டு 
ஆண்களின் கண்களை மட்டும் 
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ? 

அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும் 
நான் ராமனாக்கவில்லை ! 

உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து 
தீயில் இறங்கச் சொன்ன 
சராசரி மனிதன்தானே ! 

இருந்தும் கடந்த சில வருடங்களாக 
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை 
பாலியல் குற்றங்கள்தான் ! 

இவை எப்படி நிகழ்கின்றன ? 
பத்து வயது சிறுமியை 
பலாத்காரம் செய்கிற வன்மம் 
எப்படி முளைத்தது ? 

உண்மையில் ஊரெங்கும் உலவும் 
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும் 
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு 
பழுதடைகிற நெஞ்சம்.. 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 
ராட்சச விஷ்வரூபம் எடுத்து 
மொத்தமாய் வரம்பு கடந்து 
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது ! 

அத்தனைக்கும் காரணம் 
நீங்கள்தானென சொல்லவில்லை.. 
முக்கியக் காரணமாய் நீங்கள்…. 

அதற்காய் உங்களை 
ஆடைக் கூண்டுகளுக்குள் 
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை.. 

அநாகரீகமற்ற.. அடுத்தவர் கண்கள் கூசாத.. 
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை.. 
முகத்தைத் தாண்டி மற்றதைப் 
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை.. 
நீங்கள் அணிவதால் 
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை.. 

அங்கம் காட்டவில்லை என்பதற்காய் 
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை ! 

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி 
இனி வரும் சமூகத்தை 
பாலியல் வக்கிரங்களில் இருந்து 
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்.. 

ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் ! 
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் ! 
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் ! 
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!! 

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல.. 

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை ! ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை ! ஒரு படைப்பாளி தன பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி ! 

பலிக்கும் என்ற
நம்பிக்கையோடும்.. 
பிரியமுடன்… 
பிரியன்…


No comments: